திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்


திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தகவல்
x
தினத்தந்தி 23 Nov 2019 10:16 PM GMT (Updated: 23 Nov 2019 10:16 PM GMT)

திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா நடைபெறும் மைதானத்தில் ஏற்பாடுகளை 3 அமைச்சர்கள் பார்வையிட்டனர். அப்போது 2 புதிய மாவட்டங்களுக்கு முதல்-அமைச்சர் ரூ.600 கோடியை ஒதுக்கி உள்ளார் என வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறினார்.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டத்தை பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மாவட்டத்தையும் வருகிற 28-ந் தேதி (வியாழக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் தொடங்கி வைக்கிறார். திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா தொன்போஸ்கோ பள்ளியில் நடக்கிறது. அங்கு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த நிலையில் தொடக்க விழா நடைபெறும் தொன் போஸ்கோ பள்ளி மைதானத்தை வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, முதன்மை செயலாளர் மற்றும் வருவாய் ஆணையாளர் ஜெ.ராதாகிரு‌‌ஷ்ணன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது கலெக்டர்கள் சண்முகசுந்தரம் (வேலூர்), சிவனருள் (திருப்பத்தூர்), சப்-கலெக்டர் வந்தனா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயுள்ளத்துடன் 5 புதிய மாவட்டங்கள், 5 புதிய கோட்டங்கள், 5 தாலுகாக்களை பிரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார். திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டத்திற்கு ரூ.600 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். இந்த மாவட்டங்களை அவரே நேரில் வந்து தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதற்கான ஏற்பாடுகளை அனைத்துத் துறையினரும் சிறப்பாக செய்ய வேண்டும்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 32 மாவட்டங்களில் முதன்மை மாவட்டமாக வேலூர் மாவட்டத்தை உருவாக்கி காட்டியவர் அமைச்சர் கே.சி.வீரமணி ஆவார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமே‌‌ஷ், கோவி.சம்பத்குமார், நகர அ.தி.மு.க.செயலாளர் டி.டி.குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வம், ரமே‌‌ஷ், முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் தலைவர் லீலா சுப்பிரமணியம், கந்திலி ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.ஆறுமுகம், கே.எஸ்.சாமிக்கண்ணு மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டத்தை வருகிற 28-ந் தேதி காலை 10.30 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாவட்டத்தை பிரிப்பதற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தமில்லை என்று முதல்-அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

கலெக்டர் அலுவலகம் மற்றும் அனைத்து துறை அலுவலகத்திற்கும் நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. கோவில் நிலங்களில் பட்டா வழங்க ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. நீர்நிலை புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கக்கூடாது என்றும் ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. அதனை கருத்தில் கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். தொடக்க நிகழ்ச்சிக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.

Next Story