விவசாய பணிகளுக்காக செட்டிப்பாளையம் அணையிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு


விவசாய பணிகளுக்காக செட்டிப்பாளையம் அணையிலிருந்து வாய்க்காலில் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 24 Nov 2019 11:00 PM GMT (Updated: 24 Nov 2019 8:19 PM GMT)

கரூர் அருகேயுள்ள செட்டிப்பாளையம் அணையிலிருந்து விவசாய பணிகளுக்காக வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டள்ளது. அணை நிரம்பிய நிலையில் கடல்போல் காட்சியளிப்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.

கரூர்,

கரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களை வளப்படுத்தும் காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் அமராவதியும் ஒன்றாகும். பழனிமலைத்தொடருக்கும், ஆனைமலைத்தொடருக்கும் இடையில் உள்ள மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உற்பத்தியாகும் இந்த ஆறு திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை வழியாக கரூர் நகருக்குள் பாய்ந்து திருமுக்கூடலூரில் காவிரியாற்றில் கலக்கிறது. திருப்பூர் மாவட்டம் அமராவதி நீர்பிடிப்பு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, 90 அடி உயரமுள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டுகிறபோது தான் உபரிநீர் கரூர் அமராவதி ஆற்றில் திறக்கப்படுகிறது. அரசு உத்தரவின்பேரில் பாசனத்திற்காகவும் நீர் திறக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரமாக அமராவதி அணையிலிருந்து தொடர்ச்சியாக பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 63.75 அடியாக இருக்கிறது. எனினும் கரூர் அமராவதி ஆற்றில் 800 கனஅடி நீர் நேற்று காலை நிலவரப்படி திறக்கப்பட்டது. இந்த நிலையில் கரூர் அருகே அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட செட்டிப்பாளையம் அணை நிரம்பி கடல்போல் காட்சியளிக்கிறது. அங்கு மலைக்குன்றின் மீதுள்ள குண்டலீசுவரா கோவிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் வந்து செட்டிப்பாளையம் அணையை பார்வையிட்டு இயற்கையை ரசிப்பதற்காக பொழுது போக்கிற்கு வந்து செல்கின்றனர்.

விவசாய பணிகள் தீவிரம்

எனினும் செட்டிப்பாளையம் அணையின் மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறப்பு இல்லை. உபரிநீர் மட்டும் ஆற்றில் வழிந்தோடுகிறது. இதனால் கரூர் நகர்புற அமராவதி ஆற்றில் சிறிதளவு தண்ணீர் செல்வதை காண முடிகிறது. மாறாக பாசனத்திற்காக அணையையொட்டியவாறு செல்லும் வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் தொடங்கி அப்பிப்பாளையம், கருப்பம்பாளையம், சுக்காலியூர், திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வாய்க்காலில் தண்ணீர் செல்வதால் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விவசாயிகள் பலரும் சம்பா சாகுபடி பணியில் பரவலாக இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். இதேபோல் சின்னஆண்டாங்கோவில் தடுப்பணையும் நிரம்பிய நிலையில் உள்ளது.

பூங்கா புனரமைக்கப்படுமா?

செட்டிப்பாளையம் அணையையொட்டிய பூங்காவில் சிறுவர்-சிறுமிகளுக்கு சறுக்கு விளையாட்டு விளையாடுவதற்கான உபகரணம், ஊஞ்சல், சிமெண்டால் ஆன இருக்கைகள் ஆகியவை சேதமடைந்து கிடக்கின்றன. மேலும் பூங்காவினுள் ஆங்காங்கே சீமைக்கருவேலமரங்கள், வேண்டாத செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி காட்சியளிக்கிறது. இதனால் அணையை பார்வையிட வரும் பொதுமக்கள் பூங்காவில் அமர்ந்து பொழுது போக்க முடியாத நிலை உள்ளது. எனவே பூங்காவில் சேதமடைந்த உபகரணங்களை பழுது பார்க்க வேண்டும். வேண்டாத செடி-கொடிகளை அகற்றி சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

பாலத்திற்கு வெள்ளை அடிக்கும் பணி

கரூர் லைட்-அவுஸ் கார்னில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க பழமை வாய்ந்த பாலம் உள்ளது. இதில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, சிறுவர்-சிறுமிகள் விளையாடுவது உள்ளிட்டவற்றுக்காக நவீன உபகரணங்களுடன் பூங்கா அமைக்கம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக ஏற்கனவே இருந்த பாலத்தின் கைப்பிடி சுவர் இடித்து அகற்றப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக சிதிலமடைந்து காட்சியளித்த அந்த பாலத்தில் தற்போது தொழிலாளர்கள் வெள்ளை அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாலமானது பளீச்... என்கிற நிலைக்கு மாறி வருகிறது. இதனை வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். அந்த பாலத்தின் கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளிட்டவை சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த பாலத்தின் பெருமை குறித்து கரூர் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அது பற்றிய வரலாற்று ஆதார தகவல்களை பூங்காவினுள் பதிவிட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story