கார் மீது லாரி மோதல்; 3 பெண்கள் பலி மருத்துவ சிகிச்சைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்


கார் மீது லாரி மோதல்; 3 பெண்கள் பலி மருத்துவ சிகிச்சைக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 25 Nov 2019 11:15 PM GMT (Updated: 25 Nov 2019 6:57 PM GMT)

வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்கு சென்று திரும்பிய போது கார் மீது லாரி மோதி 3 பெண்கள் பலியானார்கள்.

தர்மபுரி,

திருப்பத்தூர் அருகே உள்ள சாக்கனாம்பட்டியை சேர்ந்தவர் கோபிநாத். இவர் திருப்பூரில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய தாயார் சத்தியவாணி (வயது 61). இவருக்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதற்காக அவர் வேலூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் நேற்று சத்தியவாணி மற்றும் உறவினர்கள் அன்புமணி (58), கவிதா(40) ஆகியோர் வேலூருக்கு மருத்துவ சிகிச்சைக்காக காரில் சென்றனர். பின்னர் அவர்கள் சிகிச்சை முடிந்து மீண்டும் திருப்பூருக்கு திரும்பி கொண்டு இருந்தனர். இந்த காரை ரமேஷ் (40) என்பவர் ஓட்டி வந்தார். தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் சென்றபோது பின்னால் வந்த லாரி திடீரென கார் மீது மோதியது.

3 பெண்கள் பலி

இந்த விபத்தில் காரின் பின்பகுதி நொறுங்கியது. இதில் இருக்கையில் அமர்ந்து இருந்த சத்தியவாணி, அன்புமணி, கவிதா ஆகிய 3 பேரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். கார் டிரைவர் ரமேஷ் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் விரைந்து சென்று படுகாயம் அடைந்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இடிபாடுகளில் சிக்கி இறந்த 3 பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story