தஞ்சையில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு செப்டம்பர் மாதம் விமான சேவை தொடக்கமா? அதிகாரிகள் பதில்


தஞ்சையில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு செப்டம்பர் மாதம் விமான சேவை தொடக்கமா? அதிகாரிகள் பதில்
x
தினத்தந்தி 25 Nov 2019 11:15 PM GMT (Updated: 25 Nov 2019 7:11 PM GMT)

தஞ்சையில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு செப்டம்பர் மாதம் விமான சேவை தொடக்கமா? என்பதற்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.

தஞ்சாவூர்,

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பல்வேறு வெளிநாடுகளில் பணி புரிந்து வருகின்றனர். ஒரு காலத்தில் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு தான் செல்ல வேண்டும். பின்னர் பல்வேறு வளர்ச்சியின் காரணமாக திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து விமான சேவை தொடங்கப்பட்டது.

திருச்சியில் இருந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவோர் திருச்சி அல்லது சென்னைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அங்கே செல்வதற்கு கார், ரெயில்களில் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. வியாபாரம் தொடர்பாக பலர் தினமும் சென்னைக்கு சென்று வருகின்றனர்.

எதிர்பார்ப்பு

தற்போது உள்நாட்டு விமான சேவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முக்கிய நகரங்களில் இருந்து விமான சேவை தொடங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. தஞ்சையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிள்ளைநாயக்கன்பட்டியில் விமானப்படை தளம் உள்ளது. 30 வருடங்களுக்கு முன்பு தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்ல சிறிய ரக விமானமான வாயுதூத் என்ற விமான சேவையை மத்திய அரசு தொடங்கியது.

பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் 2 ஆண்டுகளில் மத்திய அரசு இந்த விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியது. தற்போது விமான சேவை தொடங்கினால் லாபகரமாக இருக்கும் என்பதால் விரைவில் இதை தொடங்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

செப்டம்பர் மாதம்

இந்த நிலையில் தஞ்சை விமானப்படை தளத்தில் விரிவாக்க பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. தஞ்சையில் இருந்து சென்னைக்கும், பெங்களூருவுக்கும் முதல்கட்டமாக விமான சேவையை மத்திய அரசு தொடங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு(2020) செப்டம்பர் மாதம் விமான சேவை தொடங்கும் எனவும் தகவல் வெளியானது.

இது குறித்து திருச்சி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அப்படி எந்த தகவலும் இல்லை என உறுதியான தகவலை தெரிவிக்க மறுத்து விட்டனர்.

Next Story