உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சிறந்த வெற்றியை மக்கள் தருவார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி


உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சிறந்த வெற்றியை மக்கள் தருவார்கள் - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 26 Nov 2019 10:30 PM GMT (Updated: 26 Nov 2019 8:00 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சிறந்த வெற்றியை மக்கள் தருவார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திருவண்ணாமலை,

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொங்கல் திருநாளுக்கு முன்பாகவே எல்லா தமிழர்களின் மனதிலும் மகிழ்ச்சி ஏற்படுகிற வகையில் பொங்கல் பரிசு அறிவிப்பை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதுவும் எங்கள் துறையின் சார்பாக 32 ஆயிரத்து 946 கடைகள் மூலமாகவும், 46 நகரும் கடைகள் மூலமாகவும் பொங்கல் பரிசை கொண்டு செல்லும் வாய்ப்பை கொடுத்து உள்ளார்.

கடந்த ஆண்டு இதேபோன்று அறிவிப்பை கொடுத்தார்கள். ரூ.1000-த்தை அனைவருக்கும் கிடைக்கும் வகையில் அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றினர். இந்த ஆண்டும் குறைவின்றி மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

எந்தவித குறைவின்றி முதல்- அமைச்சர் மிகவும் சிறப்பாக ஆட்சியை செய்து வருகிறார். உள்ளாட்சியிலும் நல்லாட்சி அமையும். இந்திய அளவில் அனைத்து துறைகளிலும் தொடர்ந்து முதன்மையான இடத்தை தமிழக அரசு தக்க வைத்து கொண்டு வருகிறது. சட்டம்- ஒழுங்கு பேணி காப்பதில் முதன்மையான மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

அத்திவரதர் காட்சி அளித்த பிறகு தமிழ்நாடு முழுவதும் முதல்-அமைச்சர் ஆட்சியில் செழுமையாக உள்ளது. ஆளும் கட்சி வேட்பாளர்களை தேர்ந்தெடுத்தால் தான் மக்களின் குறைகளை அமைச்சரிடத்திலும், அரசு துறைகளிலும் கொண்டு செல்வார். எதிர் கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் அவர்களது பகுதி வளர்ச்சி அடையாமல் போய்விடும். அதனால் மக்கள் தெளிந்த நீரோடையாக உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.விற்கு சிறந்த வெற்றியை மக்கள் தருவார்கள் என்று நம்புகிறேன்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது டுவிட்டரில் குருமூர்த்தியை நான் சந்திக்கவில்லை என்றும், அது போன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும், குருமூர்த்தி சொல்லி இருப்பது தவறான தகவல் என்றும் கூறியுள்ளார். முதல்-அமைச்சரை பற்றிய தவறான தகவலை பதிவு செய்து உள்ளதை திருத்தி கொள்ள வேண்டும். குருமூர்த்தி அவரது அறிவையும், ஆற்றலையும் நல்லதற்கு பயன்படுத்த வேண்டும் நல்லதை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும்.

தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ள கூட்டுறவு தேர்தலுக்கு யாரெல்லாம் பணம் கட்டி உள்ளார்களோ? அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் வராது. நீதிமன்றத்தில் நாங்கள் வழிகாட்டுதல் கேட்டு உள்ளோம். நீதிபதி தெரிவித்த பிறகு உடனடியாக அனைவருக்கும் தெரிவிக்கப்படும். பின்னர் நடைபெறும் தேர்வில் அவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளலாம். யாரும் கூடுதல் செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது திருவண்ணாமலை மத்திய மாவட்ட கூட்டுறவு சங்கத் தலைவர் பெருமாள் நகர் கே.ராஜன் மற்றும் பலர் உள்ளனர்.

Next Story