நாராயணசாமியை பார்க்க யாரும் சென்னை செல்ல வேண்டாம் - முதல்-அமைச்சர் அலுவலகம் வேண்டுகோள்


நாராயணசாமியை பார்க்க யாரும் சென்னை செல்ல வேண்டாம் - முதல்-அமைச்சர் அலுவலகம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 26 Nov 2019 11:44 PM GMT (Updated: 26 Nov 2019 11:44 PM GMT)

முதல்-அமைச்சர் நாராயணசாமியை பார்க்க யாரும் சென்னை செல்ல வேண்டாம் என்று அவரது அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி கடந்த சில நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் கடந்த 24-ந்தேதி இரவு அனுமதிக்கப்பட்டார்.

25-ந்தேதி அவருக்கு முழங்கால் மூட்டில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து நாராயணசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் முதல்-அமைச்சர் அலுவலகம் விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மூட்டுவலி காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு டாக்டர்களின் பரிந்துரையின்பேரில் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.

இதையடுத்து மருத்துவமனையில் இருந்தபடியே முதல்-அமைச்சர் நாராயணசாமி அலுவலக கோப்புகளை பார்வையிட்டு கையெழுத்திட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதால் இன்னும் ஓரிரு தினங்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் முதல்-அமைச்சர் தற்போது பூரண ஓய்வில் இருக்கவேண்டியுள்ளதாலும் விரைவில் மருத்துவமனையில் இருந்து திரும்ப உள்ளதாலும் அவரைக் காண யாரும் சென்னை செல்லவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தன்னுடைய நலன்குறித்து அன்புடன் விசாரித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story