மக்கள் நேர்காணல் முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.8½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


மக்கள் நேர்காணல் முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.8½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 27 Nov 2019 11:00 PM GMT (Updated: 27 Nov 2019 4:57 PM GMT)

நல்லூரில் நடந்த மக்கள் நேர்காணல் முகாமில் 194 பயனாளிகளுக்கு ரூ.8½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

வலங்கைமான்,

வலங்கைமான் வட்டம் நல்லூர் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். முகாமில் 194 பயனாளிகளுக்கு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ரூ.8 லட்சத்து 49 ஆயிரத்து 440 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நேர்காணல் முகாம் என்பது அரசின் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூறி, அவர்களின் கோரிக்கைகளை அவர்களிடத்திற்கே சென்று மனுக்களாக பெற்று அவற்றிற்கு உரிய தீர்வு காணப்படுவதே.

விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்

கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நிதி உதவி திட்டத்தின் கீழ் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதேபோல் ஒவ்வொரு துறையிலும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களை மக்கள் பெற்று பயனடைய வேண்டும்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள ரே‌‌ஷன் கடை சரியாக இயங்குகிறதா? என்பதை அவ்வப்போது கண்காணித்து கொள்ள வேண்டும். அலுவலர்கள் கண்காணிப்பது ஒருபுறம் இருந்தாலும் பொதுமக்களும் கண்காணிக்க வேண்டும். அதேபோல் அங்கன்வாடி, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்டவைகள் சரியான முறையில் செயல்படுகிறதா? என்பதை தொடர்ந்து கண்காணித்து கொள்ள வேண்டும். அலுவலர்கள் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வேளாண்மைத்துறையில் விவசாயிகளுக்கு தேவையான திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்படுவதை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், வேளாண்மை இணை இயக்குனர் சிவக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் ஜெயராஜ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ரமே‌‌ஷ், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்தானம், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பூஸ்‌‌ஷனகுமார், தாசில்தார் இஞ்ஞாசிராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story