ஆலங்குளம் அருகே பரபரப்பு: 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் - 3 வாலிபர்கள் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு


ஆலங்குளம் அருகே பரபரப்பு: 14 வயது சிறுமியை கடத்தி கூட்டு பலாத்காரம் - 3 வாலிபர்கள் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 27 Nov 2019 11:30 PM GMT (Updated: 27 Nov 2019 8:23 PM GMT)

ஆலங்குளம் அருகே 14 வயது சிறுமியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆலங்குளம், 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள சோலைசேரி வேதகோவில் தெருவை சேர்ந்த களஞ்சியம் மகன் முத்துவேல் (வயது 30). இவரது நண்பர்கள், அதே ஊரிலுள்ள காமராசர் நகரை சேர்ந்த சிங்கம் மகன் முருகன் (25), கருப்பசாமி (28) மற்றும் பாறைத்தெருவை சேர்ந்த இளையபெருமாள் மகன் சிலம்பரசன் (28).

இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் மதியம் 12 மணியளவில் ஊருக்கு அருகே 2 மோட்டார் சைக்கிள்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது வயல்வெளியில் 14 வயது சிறுமி ஒருவர் தனியாக சென்று கொண்டிருந்தாள். அந்த 4 பேரும் ரோடு ஓரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அந்த சிறுமியிடம் சென்று விசாரித்தனர். அப்போது தனது தாயாரை தேடி செல்வதாக அந்த சிறுமி கூறியுள்ளாள்.

உடனே அந்த 4 பேரும், உனது தாயார் இருக்கும் இடத்துக்கு அழைத்து செல்வதாக கூறி தங்களுடன் வருமாறு கூறினர். இதை நம்பி அவர்களுடன் அந்த சிறுமி ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறினாள். அவர்கள் அந்த சிறுமியை ஊருக்கு அருகில் உள்ள மலைப்பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு சிறுமியை 4 பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அலறித்துடித்த அந்த சிறுமியை அவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு அருகில் உள்ள மெயின் ரோட்டில் இறக்கி விட்டு விட்டு தப்பி சென்று விட்டனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி கதறி அழுதவாறு ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள்.

இதற்கிடையில், மகளை காணாமல் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். பின்னர் பெற்றோர் அவரை கண்டுபிடித்து தருமாறு ஊத்துமலை போலீசாரிடம் புகார் செய்தனர். போலீசார் ஊருக்கு அருகே ரோடு ஓரத்தில் அலங்கோலமாக அழுதவாறு நின்று கொண்டிருந்த அந்த சிறுமியை மீட்டனர். பின்னர் அந்த சிறுமியை அவர்கள் ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு இன்ஸ்பெக்டர் ரோஸ்லின் சாவியோ அந்த சிறுமியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவளை 4 வாலிபர்களும் கடத்தி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவேல், கருப்பசாமி, சிலம்பரன் ஆகிய 3 பேரை நேற்று மாலையில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள முருகனை வலைவீசி தேடி வருகின்றனர்.

14 வயது சிறுமியை 4 வாலிபர்கள் கடத்திச்சென்ற கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story