பெண் தர மறுத்தவரின் வீட்டுக்கு தீவைத்த ரவுடிக்கு 5 ஆண்டு சிறை - புதுவை கோர்ட்டு தீ்ர்ப்பு


பெண் தர மறுத்தவரின் வீட்டுக்கு தீவைத்த ரவுடிக்கு 5 ஆண்டு சிறை - புதுவை கோர்ட்டு தீ்ர்ப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 10:30 PM GMT (Updated: 27 Nov 2019 9:51 PM GMT)

பெண் தர மறுத்தவரின் வீட்டு தீ வைத்த ரவுடிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

புதுச்சேரி,

பாகூரை அடுத்த இருளன்சந்தை பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மனைவி ஆஷா மணி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வினோத்குமார் (வயது 29) என்பவர் அண்ணாமலையின் மகளை ஒருதலையாக காதலித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாமலையின் வீட்டிற்கு சென்று அவரது மகளை திருமணம் செய்து வைக்கும்படி கேட்டார். அதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், அண்ணாமலை, அவரது மனைவி ஆஷா மணி ஆகியோரை தாக்கி கத்தியால் வெட்டினார். மேலும் அவர்களது வீட்டை தீ வைத்து கொளுத்தினார்.

இது குறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இது தொடர்பாக புதுவை முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி தாமோதரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட வினோத்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தாமோதரன் தீர்ப்பு கூறினார்.

வினோத்குமார் மீது குடியிருப்பு பாளையம் பகுதியை சேர்ந்த மாணவர் சுவேதன் கொலை வழக்கு உள்பட 9 வழக்குகள் உள்ளன.

Next Story