பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்


பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:45 PM GMT (Updated: 28 Nov 2019 2:38 PM GMT)

அரியலூர் மாவட்ட பகுதிகள் மற்றும் பாடாலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்திற்கு மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா தலைமை தாங்கினார். முன்னதாக சமூக நல விரிவாக்க அலுவலர் முத்தம்மாள் வரவேற்றார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்சாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலமானது ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தொடங்கி அண்ணாசிலை வரை சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்து முடிவடைந்தது.

பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டும், அரியலூர் மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் சதவீதம் குறைந்து வருவதால் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின்போது பெண் குழந்தைகளை மதிக்க வேண்டும், பெண் சிசுக்கொலையை ஒழிக்க வேண்டும், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இந்துமதி நன்றி கூறினார்.

விழிப்புணர்வு கோஷம்

இதேபோல் திருமானூரில் நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை, திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பள்ளி குழந்தைகள், ஊர் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், சைல்டு லைன் உறுப்பினர்கள், பெண் தூய்மை காவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கருக்கலைப்பை தவிர்ப்போம், பெண்மையை போற்றுவோம், பாலின பாகுபாடு தவிர்த்து பெண் குழந்தை பிறப்பை அதிகரிப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியபடியே ஊர்வலமாக சென்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று மீண்டும் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடேசன், மகளிர் ஊர்நல அலுவலர் ரேணுகா, சமூகநலத்துறை ஒருங்கிணைப்பாளர் கமலி, திருமானூர் சப்-இன்ஸ்பெக்டர் பூமிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிமடத்தில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு தாசில்தார் குமரய்யா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் குருநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து தொடங்கி ஆண்டிமடம் நான்கு ரோடு சந்திப்பு, கடைவீதி, ஸ்ரீமுஷ்ணம் ரோடு வழியாக சென்று ஆண்டிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியை அடைந்தது. இதில் மாணவர்கள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷம் எழுப்பியவாறு சென்றனர். ஊர்வலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்முருகன், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை பரிமளம், சமூக நல விரிவாக்க அலுவலர் கீதா, மகளிர் ஊர்நல அலுவலர் புஷ்கலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பாடாலூர்

பெரம்பலூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்துதல் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லுசாமி தலைமை தாங்கினார். பள்ளியில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தை மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் பள்ளியில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் பாடாலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, இலவச சட்ட மைய ஆலோசகர் வெள்ளைச்சாமி, மகிளா சக்திகேந்திரா திட்ட நல அலுவலர் ஜெயந்தி மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story