கும்பாபிஷேகத்தை யொட்டி 2-ந்தேதி பாலாலயம்: தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்


கும்பாபிஷேகத்தை யொட்டி 2-ந்தேதி பாலாலயம்: தஞ்சை பெரியகோவிலில் யாகசாலை பூஜைகள் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2019 10:30 PM GMT (Updated: 28 Nov 2019 6:43 PM GMT)

தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி பாலாலயம் வருகிற 2-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் இன்று(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

தஞ்சை பெரியகோவிலில் 1996-ம் ஆண்டு கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது. 24 ஆண்டுகளுக்குப்பிறகு அடுத்த ஆண்டு(2020) பிப்ரவரி மாதம் 5-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பெரிய கோவிலில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.

கோபுரங்கள் சீரமைப்பு

குறிப்பாக பெரியகோவிலில் தரைதளம் சீரமைப்பு, புல்தரை சீரமைப்பு, கோபுரங்கள் சுத்தப்படுத்தும் பணி, பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், முருகன் சன்னதிகளின் கோபுரங்களும் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவில் வளாகத்தில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டு அங்குள்ள லிங்கங்களை பக்தர்கள், சுற்றுலா பயணிகள் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெத்தண்ணன் கலையரங்கம் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் நடக்கிறது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கும்பாபிஷேகத்தையொட்டி வருகிற 2-ந்தேதி (திங்கட்கிழமை) பாலாலயம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தொடங்குகிறது.

2-ந் தேதி பாலாலயம்

இதற்காக பெரியகோவில் வளாகத்தில் உள்ள நடராஜர் சன்னதி அருகே யாகசாலை குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதைத்தொடர்ந்து பாலாலயம் வருகிற 2-ந் தேதி(திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் நடக்கிறது.

Next Story