ஆரல்வாய்மொழி அருகே, வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்


ஆரல்வாய்மொழி அருகே, வங்கி ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - திருமணமான ஒரு மாதத்தில் பரிதாபம்
x
தினத்தந்தி 29 Nov 2019 11:15 PM GMT (Updated: 29 Nov 2019 7:22 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே வங்கி ஊழியர் திருமணமான ஒரு மாதத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே வடக்கூர் மேலத்தெருவைச சேர்ந்தவர் ராக்கோடியான் என்ற சுப்பையா. இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 மகன்கள். 2-வது மகன் மேகலிங்கம் என்ற கணேஷ் (வயது 30). இவர் நாகர்கோவில் அருகே புத்தேரியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

மேகலிங்கத்துக்கும் புத்தேரியை சேர்ந்த மாயா என்பவருக்கும் கடந்த 3-ந்தேதி திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாயாவின் சகோதரருக்கு திருமணம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 10 நாட்களுக்கு முன் மேகலிங்கம் மாயாவை அவரது பெற்றோர் வீட்டில் விட்டிருந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் தினமும் வங்கியில் வேலை முடிந்ததும் மனைவி மாயாவை பார்த்து விட்டு ஆரல்வாய்மொழிக்கு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீடு திரும்பிய மேகலிங்கம் தனது அறையில் தூங்கச் சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரம் ஆகியும் மேகலிங்கத்தின் அறைக்கதவு திறக்கவில்லை. பெற்றோர் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அங்கு மேகலிங்கம் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்கள்.

உடனே இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசாருக்கும், மேகலிங்கத்தின் மனைவி மாயாவுக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மாயா, இறந்த கணவரின் உடலை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட மேகலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மேகலிங்கத்தின் மனைவி மாயா கொடுத்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் சங்கர்குமார் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் செல்வம், மேகலிங்கம் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணமான ஒரு மாதத்துக்குள் புதுமாப்பிள்ளை மேகலிங்கம் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story