15 தொகுதிகளிலும், பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி - எடியூரப்பா சொல்கிறார்


15 தொகுதிகளிலும், பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி - எடியூரப்பா சொல்கிறார்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:15 PM GMT (Updated: 1 Dec 2019 8:04 PM GMT)

இடைத்தேர்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெறுவது உறுதி என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூரு சிவாஜிநகர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் எம்.சரவணாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் பா.ஜனதா வேட்பளார்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவது உறுதி. இடைத்தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் மீண்டும் கூட்டணி குறித்து பேசுவதாக சொல்கிறார்கள். இந்த கூட்டணி பேச்சுக்கு எந்த மதிப்பும் கிடையாது.

பைத்தியம் பிடித்தவர்கள் கூட்டணி பற்றி பேச்சு நடத்துவார்கள். இடைத்தேர்தலில் காங்கிரஸ் மண்ணை கவ்வும். எனது ஆட்சியின் பதவி காலம் நிறைவடையும் வரை காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருக்கும்.

வருகிற 9-ந் தேதி வெளியாக உள்ள இடைத்தேர்தல் முடிவு, காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகளுக்கு பாடம் புகட்டுவதாக அமையும். எடியூரப்பா அரசு மீதமுள்ள 3½ ஆண்டுகள் நீடிக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மீண்டும் முதல்-மந்திரியாக சித்தராமையா பகல் கனவு காண்கிறார்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story