மாவட்டத்தில் துப்புரவு பணி தீவிரம், சுகாதாரத்துறை இணை இயக்குனர் தகவல்


மாவட்டத்தில் துப்புரவு பணி தீவிரம், சுகாதாரத்துறை இணை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:00 PM GMT (Updated: 1 Dec 2019 8:48 PM GMT)

மாவட்டத்தில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு புகைமருந்து அடிக்கும் பணி மற்றும் துப்புரவு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என சுகாதாரத்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி மேற்பார்வையில் துப்புரவு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி அந்தந்த பகுதி வட்டார மருத்துவ அலுவலர்கள் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர்கள் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக கொசு புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இளையான்குடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கண்ணன், சுகாதாரத்துறை வட்டார மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் மருத்துவ குழுவினர், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள், பேரூராட்சி சுகாதார குழுவினர் இணைந்து துப்புரவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதையொட்டி இளையான்குடியில் உள்ள காசிம்ராவுத்தர் தெரு மற்றும் சம்சு தெருவில் கொசுப்புழு ஒழிப்பு மற்றும் புகை மருந்து அடித்தல் மூலம் கொசுக்களை ஒழிக்கும் பணி மற்றும் காய்ச்சல் தடுப்பு பணி நடைபெற்றது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் யசோதாமணி கூறியதாவது:-

மழைக்காலம் என்பதால் கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அனைத்து இடங்களிலும் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். 

Next Story