பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு


பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் இருந்து தவறி விழுந்து குழந்தை சாவு
x
தினத்தந்தி 1 Dec 2019 11:45 PM GMT (Updated: 1 Dec 2019 10:07 PM GMT)

பழைய வண்ணாரப்பேட்டையில் 2-வது மாடியில் உள்ள பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.

பெரம்பூர்,

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நாராயணப்பதோட்டம் 7-வது சந்தில் வசித்து வருபவர் சையத்அபுதாகீர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 2 வயதில் இர்பான் என்ற மகன் இருந்தான்.

நேற்று முன்தினம் சையத் அபுதாகீர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவருடைய மனைவி மற்றும் மகன் மட்டும் இருந்தனர். இவர்களது வீடு 2 மாடிகளை கொண்டது. 2-வது மாடியில் உள்ள வீட்டில் சையத் அபுதாகீர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மாலையில் அவருடைய மனைவி வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். இர்பான், தனது வீட்டின் பால்கனியில் நின்று விளையாடி கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அவன், 2-வது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான்.

இதில் தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை இர்பான் நேற்று முன்தினம் நள்ளிரவில் பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது. இதுபற்றி வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story