ஜோலார்பேட்டை அருகே, வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது


ஜோலார்பேட்டை அருகே, வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2019 2:15 PM GMT (Updated: 2 Dec 2019 2:00 PM GMT)

ஜோலார்பேட்டை அருகே வாலிபர் தற்கொலை வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை, 

ஜோலார்பேட்டையை அடுத்த புள்ளானேரி குட்டூர் பகுதியை சேர்ந்தவர் ராஜே‌‌ஷ் (வயது 29) இவர் பெங்களூருவில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி வீட்டின் அருகே உள்ள நண்பரின் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் ராஜே‌‌ஷ் உடலை பிரேத பரிசோதனை செய்ததில் அவரது தலையில் படுகாயம் ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று நண்பர்களான புதூர் முத்தானூர் பகுதியை சேர்ந்த பிரசாத் (29), அன்பரசு (24) ஆகியோருடன் ராஜே‌‌ஷ் மது அருந்தியுள்ளார். அப்போது ராஜேசுக்கும், பிரசாத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. திடீரென பீர் பாட்டிலால் ராஜேசின் மண்டையில் பிரசாத், அன்பரசு ஆகியோர் அடித்து நீ உயிரோடு இருப்பது ‘வேஸ்ட்’, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொள் என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவமானப்பட்ட ராஜே‌‌ஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து போலீசார் தற்கொலை வழக்கை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து பிரசாத் மற்றும் அன்பரசு ஆகிய இருவரையும் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story