தூத்துக்குடி அருகே, கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை


தூத்துக்குடி அருகே, கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Dec 2019 10:45 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

தூத்துக்குடி அருகே கணவன்-மனைவி தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளி காரநேசன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் முத்துகுமார் (வயது 37), பிளம்பர். இவருடைய மனைவி காந்தி (34). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

காந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 30-ந்தேதி முத்துகுமார் தனது மகள்கள் 2 பேரையும் தூத்துக்குடியில் உள்ள தம்பி வேலாயுதம் (30) வீட்டில் விட்டுவிட்டு கூட்டாம்புளிக்கு வந்தார்.

நேற்று முன்தினம் குழந்தைகளை அழைத்து செல்ல முத்துகுமார் வராததால் வேலாயுதத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர் கூட்டாம்புளியில் உள்ள முத்துகுமார் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் கண்ட காட்சி, அவரை அதிர்ச்சி அடைய செய்தது. அங்கு முத்துகுமார் தூக்கில் தொங்கிய நிலையிலும், தரையில் காந்தியும் பிணங்களாக கிடந்தனர்.

இதுகுறித்து உடனடியாக புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், முத்துகுமார் தூக்குப்போட்டும், காந்தி வி‌‌ஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காந்திக்கு உடல்நலம் சரியாகாத விரக்தியில் கணவன், மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது குடும்ப தகராறு காரணமாக இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டனரா? அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story