மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் காதல் திருமணம் செய்த மெக்கானிக் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 2 Dec 2019 10:00 PM GMT (Updated: 2 Dec 2019 6:04 PM GMT)

குன்றத்தூர் அருகே காதல் மனைவி கர்ப்பமாக இருக்கும்நிலையில், அவருடன் ஏற்பட்ட தகராறில் மெக்கானிக் தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

பூந்தமல்லி,

குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி, விஜயலட்சுமி அவென்யு பகுதியைச் சேர்ந்தவர் பவானி. இவரது மகன் உதயகுமார் (வயது 31), கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அமுதா (26), என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் கணவன் மனைவி இருவரும் மாங்காடு, சரஸ்வதி நகர் அனெக்ஸ் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் குன்றத்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு உதயகுமார் சென்றுள்ளார்.

இந்தநிலையில் அவரது தாய் பவானி தேவலாயத்திற்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்து பார்த்தபோது, உதயகுமார் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உதயகுமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உதயகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், உதயகுமாரும், அமுதாவும் காதல் திருமணம் செய்துகொண்டு தனியாக வசித்து வந்தபோது, அவரது மனைவி அமுதா கர்ப்பமான நிலையில், தனது தாயிடம் அதை கூறுமாறு உதயகுமார் தெரிவித்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தாய் வீட்டிற்கு சென்ற உதயகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Next Story