சோழவந்தானில், கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருட்டு


சோழவந்தானில், கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:00 PM GMT (Updated: 2 Dec 2019 7:23 PM GMT)

சோழவந்தானில் கடையின் பூட்டை உடைத்து செல்போன்கள், பணம் திருடப்பட்டது.

சோழவந்தான், 

சோழவந்தான் பாடகசாலை தெருவை சேர்ந்தவர் சதீஸ் (வயது 45). இவர் மார்க்கெட் ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் அருகே செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மதியமே கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் சதீஷ் கடையை திறக்க வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைந்து கதவு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் சென்று பார்வையிட்டனர். அப்போது கடையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட செல்போன்களும், கல்லாப் பெட்டியில் வைத்திருந்த பணமும் திருடுபோய் இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தடயவியல் நிபுணர் பிரேம் அங்கு வந்து தடயங்களை சேகரித்தார். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story