திருவண்ணாமலை அருகே, விவசாயி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை


திருவண்ணாமலை அருகே, விவசாயி வெட்டிக் கொலை - போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:15 PM GMT (Updated: 3 Dec 2019 7:06 PM GMT)

திருவண்ணாமலை அருகே விவசாயி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கலசபாக்கம், 

திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62), விவசாயி. இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். தனலட்சுமி திருவண்ணாமலை அருகே தானிப்பாடியில் உள்ள விடுதியில் வார்டனாக பணிபுரிந்து வருகிறார். இதனால் தனலட்சுமி திருவண்ணாமலையில் தங்கி உள்ளார்.

கணேசன் மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கூட்ரோடு பகுதியில் உள்ள அவரது சொந்த நிலத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே கட்டிலை போட்டு படுத்து அவர் தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் கணேசனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு கழுத்து மற்றும் மார்பு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டு உள்ளது. இதில் துடிதுடித்து அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல்அறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதம் காரணமாக கணேசன் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story