குன்னம் அருகே விபத்தில் சிக்கிய காரில் 330 கிலோ புகையிலை பொருட்கள் 2 பேர் சிறையில் அடைப்பு


குன்னம் அருகே விபத்தில் சிக்கிய காரில் 330 கிலோ புகையிலை பொருட்கள் 2 பேர் சிறையில் அடைப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 7:15 PM GMT)

குன்னம் அருகே விபத்தில் சிக்கிய காரில், 330 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குன்னம்,

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் டீஜாராம் மகன் போமாராம் (வயது 26). தற்போது தஞ்சாவூர் மாவட்டம், சீனிவாசபுரத்தில் வசித்து வருகிறார். போமாராம் சீனிவாசபுரத்தில் சுதா ஏஜென்சிஸ் என்ற பெயரில் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் ஆத்தூரில் இருந்து தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, தஞ்சாவூர் பகுதியில் சில்லறை விற்பனை செய்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ஆத்தூரிலிருந்து 330 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை வாங்கிக்கொண்டு ஒரு காரில் தஞ்சாவூர் நோக்கி வந்தார். அந்த காரை தஞ்சாவூர் மாவட்டம், சீனிவாச புரத்தை சேர்ந்த ராஜதுரை(வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். கார் பெரம்பலூரில் இருந்து அரியலூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது க.எறையூர் பிரிவு சாலை அருகே உள்ள திருப்பத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து இடது புறத்தில் உள்ள வேப்ப மரத்தின் மீது மோதி, அருகில் உள்ள யாரும் வசிக்காத ஒரு ஓட்டு வீடு முன்பு நின்றது. இதில் டிரைவர் ராஜதுரை, போமாராம் ஆகிய இருவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

2 பேர் சிறையில் அடைப்பு

விபத்தில் கார் என்ஜின் பழுதடைந்தது. இதை அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி, யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதால் அங்கிருந்து சென்றனர். கார் என்ஜின் நசுங்கி பழுதானதால் வண்டியில் கடத்தி வந்த புகையிலை பொருட்களை மூட்டை, மூட்டையாக வெளியே எடுத்து ஓட்டு வீட்டு முன்பு அடுக்கினர். அவ்வழியாக சென்றவர்கள் இதை பார்த்து மருவத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி, மருவத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராம்குமார், ராஜேந்திரன் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் 330 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் புகையிலை பொருட்களை கடத்திவந்த ராஜதுரை, போமாராம் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை புகையிலை பொருட்களுடன் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Next Story