போலீசிடம் இருந்து தப்பி ஓடிய போது லாரி மோதி காயம் அடைந்த கைதி சாவு


போலீசிடம் இருந்து தப்பி ஓடிய போது லாரி மோதி காயம் அடைந்த கைதி சாவு
x
தினத்தந்தி 3 Dec 2019 9:45 PM GMT (Updated: 3 Dec 2019 8:41 PM GMT)

போலீசிடம் இருந்து தப்பிக்க ஓடிய போது லாரி மோதியதில் காயம் அடைந்த கொலை வழக்கு கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மதுரை, 

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் வீரணன். இவரது மகன் பிரகாஷ்(வயது 26). இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. எனவே பிரகாசை போலீசார் தேடி வந்தனர். அப்போது அவர் பழனி அடிவார பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று பிரகாசை சுற்றி வளைத்தனர்.

அப்போது பிரகாஷ் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த பிரகாசின் வலது கால் முற்றிலும் சிதைந்து போனது. பின்னர் போலீசார் படுகாயம் அடைந்த பிரகாசை கைது செய்து மதுரை மத்திய சிறைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலன் அளிக்காமல் பிரகாஷ் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Next Story