ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை


ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Dec 2019 11:00 PM GMT (Updated: 3 Dec 2019 9:00 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் மேலாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூர் பட்டுநூல் சத்திரம் பகுதியில் காசா கிராண்ட் குடியிருப்பை சேர்ந்தவர் செல்வம் (வயது 53). இவருக்கு ரெஜினா என்கிற மனைவியும் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். செல்வம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டு கோட்டை சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

கடந்த சில நாட்களாக தொழிற்சாலை நிர்வாகம் பல்வேறு தொல்லைகளை செல்வத்துக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன் பகல் நேர பணியில் இருந்த செல்வத்தை நிர்வாகம் இரவு நேரபணிக்கு மாற்றியது. இதனால் செல்வம் மனஉளைச்சலில் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அனைவரும் சென்றபின் தொழிற்சாலையில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட செல்வம் கடிதம் ஒன்றை எழுதி வைத்து உள்ளார். அதில் தன்னை பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் செயல்படுவதாக குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story