ஆண்டிப்பட்டி அருகே, இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


ஆண்டிப்பட்டி அருகே, இடிந்து விழும் நிலையில் பள்ளிக் கட்டிடம் - அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2019 10:15 PM GMT (Updated: 4 Dec 2019 3:00 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 131 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். தலைமை ஆசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் சிதிலமடைந்து இருந்த காரணத்தினால், புதிதாக கட்டப்பட்ட ஒரு சில வகுப்பறைகளில் மட்டுமே மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தேனி மாவட்டத்தில் கூரை மற்றும் ஓடுகளால் அமைக்கப்பட்ட பழமையான பள்ளி வகுப்பறைகளை கண்டறிந்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் கோவில்பட்டி கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளியின் பழைய கட்டிடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பள்ளி கட்டிடத்தை இடிக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதைத்தொடர்ந்து அந்த பழைய கட்டிடத்தில் இருந்து ஓடுகள் அகற்றப்பட்டு, நீண்ட நாள் ஆகியும் கட்டிடம் இடிக்கப்படாமல் உள்ளது.

தற்போது தொடர் மழை பெய்து வருவதால் அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இதனால் அந்த கட்டிடத்திற்கு அருகாமையில் மாணவ-மாணவிகள் விளையாடும்போது உயிர்பலி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் சிதிலமடைந்து, அபாயகரமான பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story