பூட்டிய வீட்டுக்குள் டாக்டர் மர்ம சாவு


பூட்டிய வீட்டுக்குள் டாக்டர் மர்ம சாவு
x
தினத்தந்தி 4 Dec 2019 10:45 PM GMT (Updated: 4 Dec 2019 8:29 PM GMT)

பூட்டிய வீட்டுக்குள் டாக்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆலந்தூர், 

சென்னையை அடுத்த நந்தம்பாக்கம் அருகே உள்ள மணப்பாக்கம் சத்யா நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவருடைய மகன்கள் விக்னேஷ், விஜயகுமார் (வயது 25). இருவரும் டாக்டர்கள் ஆவர்.

காரைக்காலில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் டாக்டருக்கு படித்த விஜயகுமார், சிறிதுகாலம் சென்னையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.

பின்னர் பட்டமேற்படிப்பு படிக்க வேண்டி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் விஜயகுமார் மட்டும் தனியாக இருந்தார். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்த வாசுதேவன், நீண்டநேரம் கதவை தட்டியும் விஜயகுமார் கதவை திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு படுக்கையில் தனது மகன் விஜயகுமார் அசைவற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி டாக்டரான தனது மூத்த மகன் விக்னேசுக்கு தகவல் கொடுத்தார்.

அவர் வீட்டுக்கு வந்து விஜயகுமாரை பரிசோதித்து பார்த்தபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது. மர்மமான முறையில் இறந்து கிடந்த விஜயகுமார், விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

இது பற்றி நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் விஜயகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணையில் விஜயகுமார், தனது கம்ப்யூட்டரில் ஒரு கடிதம் எழுதி வைத்து உள்ளார். அதில், தனக்கு தாங்க முடியாத வேதனை இருப்பதாலும், அதை விவரிக்க முடியாத காரணத்தினாலும் தற்கொலை செய்துகொள்வதாக எழுதி வைத்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

எனவே அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

* சென்னை மெரினா கடலில் கண்ணகி சிலை அருகே கடலில் குளித்த அம்பத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ராகேஷ்வர்ஷன் (40) ராட்சத அலையில் சிக்கி மாயமானார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

* சபரிமலைக்கு மாலை அணிந்த நிலையில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததை மனைவி கண்டித்ததால் தண்டையார்பேட்டையை சேர்ந்த எலக்ட்ரீசியன் தாமோதரன்(38) தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

* நங்கநல்லூரில் குடிபோதையில் கோவில் குளத்தில் மூழ்கி பலியான ரூபன்(29) என்பவரது உடலை நேற்று தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

Next Story