வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை வீடு விற்ற பணத்தை கணவர் கொடுக்காததால் பரிதாப முடிவு


வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை வீடு விற்ற பணத்தை கணவர் கொடுக்காததால் பரிதாப முடிவு
x
தினத்தந்தி 4 Dec 2019 10:15 PM GMT (Updated: 4 Dec 2019 9:20 PM GMT)

லால்குடி அருகே, வீடு விற்ற பணத்தை கணவர் கொடுக்காததால் வி‌‌ஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

லால்குடி,

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த நன்னிமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(வயது 46). கூலித் தொழிலாளி. இவரது மனைவி விஜயகுமாரி (46). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு இடங்களில் கடன் வாங்கி திருமணம் செய்து கொடுத்தனர். இதனால், கடன் தொல்லையால் புண்ணியமூர்த்தி அவதிப்பட்டு வந்தார்.

இதனால், தாம் வசித்து வரும் வீட்டை விற்று கடனை அடைத்து விடலாம் என மனைவியிடம் கூறினார். இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டதால் புண்ணியமூர்த்தி, தனது சின்னம்மா மகன் கிரு‌‌ஷ்ணமூர்த்தி என்கிற சோனாலியிடம்(திருநங்கை) ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வீட்டை விற்றார். அதில், ரூ.2 லட்சத்து 25 ஆயிரத்தை பெற்ற புண்ணியமூர்த்தி கடனை ஓரளவு அடைத்தார். மீதிப்பணத்தை வீட்டை காலி செய்யும் போது கொடுக்கப்படுவதாக இருந்தது.

பெண் தற்கொலை

வீட்டை விற்றதில் இருந்து விஜயகுமாரி யாரிடமும் பேசாமல் மன வருத்தத்தில் இருந்து வந்தார். மேலும், வீட்டின் மேல் வாங்கிய பணத்தை தன்னிடம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் செத்து விடுவேன் என்று கூறி கணவரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், புண்ணியமூர்த்தி வேலைக்கு சென்று விட்டார். இதனால், மனவேதனை அடைந்த விஜயகுமாரி சம்பவத்தன்று எலி மருந்தை (வி‌‌ஷம்) தின்று விட்டு வீட்டில் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புண்ணியமூர்த்தி வீட்டுக்கு விரைந்து வந்து மனைவியை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விஜயகுமாரி அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து புண்ணியமூர்த்தி கொடுத்த புகாரின்பேரில், லால்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Next Story