திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலையில்லா சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் சிவன்அருள் தகவல்


திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலையில்லா சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் சிவன்அருள் தகவல்
x
தினத்தந்தி 6 Dec 2019 10:30 PM GMT (Updated: 6 Dec 2019 7:36 PM GMT)

திருப்பத்தூர் மாவட்டத்தில் வேலையில்லா சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சிவன்அருள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர், 

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்தின் உதவியுடன் ‘கவுசால்‌ஷி குசால்தா’ என்னும் திட்டத்தின் கீழ், டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு, வாணியம்பாடியில் செயல்படும் மத்திய காலணி பயிற்சி நிலையம் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.

பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இலவச திறன் வளர்ப்பு பயிற்சிகள் 46 நாட்கள் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பை சார்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பயிற்சியில் கலந்து கொள்பவரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும், 18 வயது முதல் 55 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். இப்பயிற்சியின் போது, ஒருவருக்கு ரூ.1,534 பயிற்சி உதவித்தொகையாக அளிக்கப்படும்.

இதற்கான நேர்காணல் வாணியம்பாடியில் உள்ள மத்திய காலணி பயிற்சி நிலையத்தில் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பயிற்சிக்கான கல்வித்தகுதி 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேற்படி திட்டத்தின்கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Next Story