அரசு ஆஸ்பத்திரியில், குழந்தை பெற்ற இளம்பெண் திடீர் சாவு - உறவினர்கள் போராட்டம்


அரசு ஆஸ்பத்திரியில், குழந்தை பெற்ற இளம்பெண் திடீர் சாவு - உறவினர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:15 PM GMT (Updated: 7 Dec 2019 7:47 PM GMT)

திருத்தணி அருகே அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள இஸ்லாம் நகரை சேர்ந்தவர் காஜா (வயது 30). இவர் ஆட்டோவில் காய்கறிகள் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி சபீனா (22). இவர்களுக்கு மகீரா (2) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் 2-வது முறையாக கர்ப்பம் அடைந்த சபீனா பிரசவத்துக்காக கடந்த புதன்கிழமை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதையடுத்து சபீனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றனர். அதன்படி சபீனா அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தையை பெற்று எடுத்தார்.

இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சபீனாவுக்கு, திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்து அதிர்ச்சியடைந்த சபீனாவின் உறவினர்கள் ஆஸ்பத்திரியில் முறையாக சிகிச்சை அளிக்காததாலும், டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் பொறுப்பற்றதன்மையின் காரணமாகவும் சபீனா இறந்துவிட்டதாக கூறி ஆஸ்பத்திரி முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதைப்பற்றி திருத்தணி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இறந்து போன சபீனாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு அதனடிப்படையில், விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story