பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 1,200 மாணவிகள் பங்கேற்பு


பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் 1,200 மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 8:06 PM GMT)

தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டம் நல்லானூரில் நேற்று தொடங்கியது. இதில் 1200 மாணவிகள் பங்கேற்றனர்.

தர்மபுரி,

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான பாரதியார் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டிகள் தர்மபுரி மாவட்டம் நல்லானூரில் உள்ள ஜெயம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று தொடங்கியது. போட்டிகளின் தொடக்க விழாவுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்துகிரு‌‌ஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சுப்பராயன் வரவேற்று பேசினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் பாலசுப்பிரமணி, சண்முகவேல், பொன்முடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போட்டிகளை நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குனரும், முதன்மை உடற்கல்வி ஆய்வாளருமான வாசு கொடியை ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இந்த போட்டிகளில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள ஜிம்னாஸ்டிக், குத்துச்சண்டை ஆகிய விளையாட்டு போட்டிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

ஆர்வத்துடன் பங்கேற்பு

முதல்கட்டமாக மாணவிகளுக்கு நடந்த விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து 1,200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலும் மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மாணவிகள் அந்தரத்தில் பறந்து தங்கள் விளையாட்டு திறனை வெளிப்படுத்தினார்கள். இந்த போட்டிகளை ஏராளமான மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பார்வையிட்டனர். நாளை (திங்கட்கிழமை) முதல் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடக்கிறது.

தொடக்க விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பியூலாஜேன்சுசீலா, கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் முருகன், அனைத்து பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆய்வாளர்கள், உடற்கல்வி ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக் குமார் நன்றி கூறினார்.

Next Story