ராயக்கோட்டை பகுதியில் 68 யானைகள் முகாமிட்டு அட்டகாசம்


ராயக்கோட்டை பகுதியில் 68 யானைகள் முகாமிட்டு அட்டகாசம்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 8:09 PM GMT)

ராயக்கோட்டை பகுதியில் 68 யானைகள் 3 குழுக்களாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன.

ராயக்கோட்டை,

கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குள் வந்துள்ளன. ராகி பயிர் அறுவடையை குறி வைத்து வந்துள்ள இந்த யானைகள் பல குழுக்களாக முகாமிட்டு அட்டகாசம் செய்து வருகின்றன.

அந்த வகையில் ராயக்கோட்டை அருகே ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் 40 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் லிங்கனம்பட்டி சாலையை கடந்து கருக்கம்பட்டி, தேவசமுத்திரம், மெட்டரை வழியாக சென்றன. செல்லும் வழியில் விவசாயிகள் பயிரிட்டிருந்த மக்காச்சோளம், முட்டைக்கோஸ், ராகி உள்ளிட்ட பயிர்களை யானைகள் தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தின.

பொதுமக்களை விரட்டியது

நேற்று காலை விவசாயிகள் தங்களின் விளை நிலங்களுக்கு சென்றனர். அங்கு பயிர்களை யானைகள் சேதப்படுத்தி இருப்பதை கண்டு அவர்கள் கவலையடைந்தனர். இதையடுத்து நேற்று காலை கருக்கம்பட்டி - மெட்டரை இடையே யானைகள் முகாமிட்டிருந்தன. அப்போது யானைகளை, சிலர் ஆர்வம் காரணமாக செல்போனில் படம் எடுக்க முயன்றனர். அப்போது ஒரு யானை திடீரென்று ஆக்ரோ‌‌ஷத்தில் திரும்பி பொதுமக்களை விரட்டியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்து உயிர் தப்பினார்கள். தற்போது ஊடேதுர்க்கம் காப்பு காட்டில் 35 யானைகளும், கருக்கம்பட்டி பகுதியில் 13 யானைகளும், சானமாவு காட்டில் 20 யானைகளும் என மொத்தம் 68 யானைகள் முகாமிட்டுள்ளன.

தீவிர கண்காணிப்பு

இந்த யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ராயக்கோட்டை வனச்சரகர் முருகேசன் தலைமையிலான வனக்குழுவினர், யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போல ராயக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசாரும், பொதுமக்கள் வனப்பகுதிக்குள் செல்லாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story