காய்ச்சலுக்கு, மருந்தை மாற்றி கொடுத்ததால் 8 மாத பெண் குழந்தை சாவு


காய்ச்சலுக்கு, மருந்தை மாற்றி கொடுத்ததால் 8 மாத பெண் குழந்தை சாவு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:30 PM GMT (Updated: 7 Dec 2019 8:13 PM GMT)

பாலக்கோடு அருகே காய்ச்சலுக்கு மருந்தை மாற்றி கொடுத்ததால் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.

பாலக்கோடு,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள தோமலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு இளநிலா (வயது 2) என்ற மகளும், கவி என்ற 8 மாத பெண் குழந்தையும் இருந்தனர். கடந்த சில நாட்களாக குழந்தை கவிக்கு காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனிதா குழந்தையை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்து சென்று டாக்டரிடம் காட்டி உள்ளார். அங்கு வழங்கப்பட்ட மருந்து, மாத்திரைகளை குழந்தைக்கு வனிதா கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் வனிதா குழந்தைக்கு மருந்து கொடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென மின் தடை ஏற்பட்டதால் இருளில் அவர் மருந்தை மாற்றி குழந்தைக்கு கொடுத்ததாக தெரிகிறது. பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை கவி திடீரென வாந்தி எடுத்து மயங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த வனிதா அலறி துடித்தார். சத்தம் கேட்டு முருகன் மற்றும் அக்கம், பக்கத்தினர் வந்து குழந்தையை பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

பின்னர் மேல் சிகிச்சைக்காக குழந்தையை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை கவி பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து பாலக்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 8 மாத பெண் குழந்தை இறந்தது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காய்ச்சலுக்கு மருந்தை மாற்றி கொடுத்ததால் 8 மாத பெண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story