உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்


உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 8 Dec 2019 10:30 PM GMT (Updated: 8 Dec 2019 5:09 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

ஈரோடு, 


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 27 மற்றும் 30-ந் தேதிகள் என 2 கட்டமாக நடக்கின்றன. தேர்தல் 2 கட்டமாக நடந்தாலும், வேட்பு மனு பெறுவது உள்ளிட்ட நடைமுறைகள் ஒரே கட்டமாகவே நடைபெறும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி இன்று (திங்கட்கிழமை) முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழுவுக்கு 19 கவுன்சிலர் பதவிகளும், 14 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 183 வார்டுகளுக்கு ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது. இதேபோல் 225 கிராம ஊராட்சி தலைவர்கள், 225 ஊராட்சிகளுக்கு உள்பட்ட 2 ஆயிரத்து 97 கவுன்சிலர் பதவிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

கிராம ஊராட்சிகளில் உள்ள வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகங்களிலேயே தங்கள் வேட்புமனுக்களை வழங்கலாம். அந்த அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வேட்புமனுக்களை பெறுகிறார்கள். கிராம ஊராட்சி தலைவர் பதவி, ஊராட்சி ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிகளுக்கு அந்தந்த ஒன்றியக்குழு அலுவலகங்களில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்.

இதுபோல் மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர் பதவிக்கும் ஒன்றியக்குழு அலுவலகங்களிலேயே வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு செய்ய வரும் வேட்பாளர்கள் தங்களுடன் 4 பேரை மட்டுமே அழைத்து வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.

தேர்தல் அறிவிப்பு குறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. நேரடி மற்றும் மறைமுக தேர்தல்களுக்கான தேர்தல் அறிவிக்கை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் 9-ந் தேதி (இன்று) வெளியிடப்படும். இதேபோல் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 9-ந் தேதி (இன்று) தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது. 17-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். 19-ந் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

தேர்தல் தினத்தில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கும். ஜனவரி மாதம் 2-ந் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். தேர்தல் நடவடிக்கை 4-ந் தேதி முடிவுபெறும்.

தேர்ந்தெடுக்கப்படும் வார்டு கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவி ஏற்பு 6-ந் தேதி நடக்கிறது. மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் 11-ந் தேதி நடக்கும். தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ள வரை வாரந்தோறும் நடக்கும் மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் உள்பட அரசு மற்றும் அரசு சார்ந்த கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது.

எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகளை அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், வாக்காளர்கள் என அனைவரும் தவறாமல் கடைபிடித்து, ஈரோடு மாவட்டத்தில் சிறந்த முறையில் தேர்தல் நடத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை 0424-2255365 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம். புகார்களை உடனுக்குடன் பதிவு செய்து, விசாரணை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தெரிவித்து உள்ளார்.

Next Story