பேச்சிப்பாறை அருகே பரிதாபம் கால்வாயில் கார் கவிழ்ந்து குழந்தையுடன் கணவன்-மனைவி பலி


பேச்சிப்பாறை அருகே பரிதாபம் கால்வாயில் கார் கவிழ்ந்து குழந்தையுடன் கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 8 Dec 2019 11:15 PM GMT (Updated: 8 Dec 2019 5:32 PM GMT)

பேச்சிப்பாறை அருகே கால்வாயில் கார் கவிழ்ந்து 1 வயது குழந்தையுடன் கணவன்-மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே மணியங்குழி, அஞ்சுகண்டறை பகுதியைச் சேர்ந்தவர் அனிஷ் (வயது 30), தேனீ வளர்க்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மஞ்சு (22). இவர்களுக்கு அமர்நாத் என்ற ஒரு வயது ஆண் குழந்தை இருந்தது.

நேற்று காலை அனிஷ் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக மனைவி மற்றும் மகனுடன் காரில் குலசேகரம் சென்றார். காரை அனிஷ் ஓட்டி சென்றார். குலசேகரத்தில் 3 பேருக்கும் புதிய துணிமணி எடுத்தனர். மேலும் காய்கறி மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் காரில் அஞ்சுகண்டறை நோக்கி புறப்பட்டனர்.

கார் மதியம் 12.30 மணியளவில் அஞ்சுகண்டறை அருகே கால்வாய் கரையோரம் உள்ள சாலையில் சென்றது. அப்போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உடனே, அனிஷ் காரை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால், எதிர்பாராதவிதமாக கால்வாயில் கார் கவிழ்ந்தது. கால்வாயில் அதிக அளவில் வெள்ளம் செல்வதால் கார் முற்றிலுமாக மூழ்கியது. காரின் கண்ணாடி முழுவதும் மூடப்பட்டு இருந்ததால் உள்ளே இருந்தவர்களால் வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டனர். மேலும், அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததால் உடனடியாக யாரும் உதவிக்கு வரவில்லை.

சிறிதுநேரம் கடந்து அந்த வழியாக சென்றவர்கள் கால்வாயில் கார் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 3 பேரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

தொடர்ந்து, அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்த அனிசின் உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைக்கும் வண்ணம் இருந்தது.

Next Story