புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி


புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் 20 அடி பள்ளம் தோண்டிய வியாபாரி
x
தினத்தந்தி 8 Dec 2019 11:15 PM GMT (Updated: 8 Dec 2019 7:04 PM GMT)

புதையல் இருப்பதாக ஜோதிடர் கூறியதை நம்பி வீட்டுக்குள் ஐஸ் வியாபாரி 20 அடி பள்ளம் தோண்டினார்.

மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கும்மனூர் கிராமத்தில் பெருமாள் கோவில் தெருவில் வசிப்பவர் மோகன் (வயது 62). ஐஸ் வியாபாரி. அவரது வீட்டில் 25 அடி ஆழத்தில் புதையல் இருப்பதாகவும் இதனால் வீட்டில் பள்ளம் தோண்டப்பட்டு வருவதாக பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் உத்தரவின் பேரில் ஞாயிறு குறுவட்ட ஆய்வாளர் ஜூலியட்விமலா, கிராம நிர்வாக அலுவலர் அரிகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் ஐஸ் வியாபாரி மோகன் வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது வீட்டுக்குள் 20 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து ஐஸ் வியாபாரி மோகனிடம் வருவாய்த்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், ஜோதிடர் ஒருவர் வீட்டுக்குள் புதையல் இருப்பதாக கூறியதை தொடர்ந்து வீட்டுக்குள் பள்ளம் தோண்டியதாக தெரிவித்தார். பள்ளத்தை உடனடியாக மூட வேண்டும். இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என்று வருவாய்த்துறை அதிகாரிகள் மோகனை எச்சரித்தனர்.

பின்னர் அந்த பள்ளம் மூடப்பட்டது. இது குறித்து சோழவரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

Next Story