எகிப்து நாட்டில் இருந்து திருச்சிக்கு 30 டன் வெங்காயம் வந்தது


எகிப்து நாட்டில் இருந்து திருச்சிக்கு 30 டன் வெங்காயம் வந்தது
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 5:53 PM GMT)

எகிப்து நாட்டில் இருந்து திருச்சிக்கு 30 டன் வெங்காயம் வந்து உள்ளது. தட்டுப்பாடு நீங்கியதால் ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை ஆனது.

திருச்சி,

தட்டுப்பாடு, விலை உயர்வு காரணமாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெங்காயம் அகில இந்திய அளவில் அரசியலுக்கு அப்பாற்பட்டு பேசப்படும் ஒரு பொருளாகி விட்டது. சென்னையில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. திருச்சியில் முதல் தரமான பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. உருவத்தில் சிறிய, ஈரமான வெங்காயம் ஒரு கிலோ ரூ.70 முதல் கிடைத்து வந்தது.

இந்நிலையில் எகிப்து நாட்டில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் நேற்று திருச்சி வெங்காய மண்டிக்கு வந்தது. எகிப்தில் இருந்து கப்பல் மூலம் மும்பை துறைமுகத்தில் இறங்கிய இந்த வெங்காயத்தை 3 லாரிகளில் நேற்று திருச்சிக்கு கொண்டு வந்து இறக்கினார்கள். இந்த வெங்காயம் சற்று கருமையான நிறத்தில் காணப்பட்டது.

தட்டுப்பாடு நீங்கியது

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தொடர்பாக மொத்த வியாபாரி ஒருவர் கூறுகையில் ‘எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதால் ெபரிய வெங்காயம் தட்டுப்பாடு நீங்கி விட்டது. திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள், ஓட்டல் அதிபர்கள் வாங்கி சென்று உள்ளனர். ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கு விற்பனை செய்து வருகிறோம். இனி வெங்காயம் விலை உயர வாய்ப்பு இல்லை’ என்றார்.

இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் 50 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு லாரிகளில் ஏற்றி அனுப்பப்பட்டன.

Next Story