இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்


இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 9 Dec 2019 7:56 PM GMT)

இடைத்தேர்தலில் காங்கிரசின் தோல்விக்கான காரணம் குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜனதா 12 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி ஆறுதல் வெற்றி அடைந்துள்ளது. ஜனதா தளம்(எஸ்) கட்சி போட்டியிட்ட 12 தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.

பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் களம் இறக்கப்பட்டனர். 2 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளித்தது. காங்கிரஸ் சார்பில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா அனைத்து தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

அவர் தனது பிரசார கூட்டங்களில் பேசும்போது, தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்கள் விலைபோய்விட்டனர், சந்தைகளில் விற்பனையாகும் ஆடு, கோழி, மாடுகளை போல் எம்.எல்.ஏ.க்கள் விற்பனையானார்கள். குதிரை பேரத்தில் ஈடுபட்ட தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு தக்க பாடம் புகட்டுங்கள் என்று சித்தராமையா வேண்டுகோள் விடுத்தார். அனைத்து பிரசார கூட்டங்களில் சித்தராமையாவின் பேச்சின் முக்கிய அம்சம் இதுவாக தான் இருந்தது.

இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் சற்று பீதியடைந்தனர். சித்தராமையாவின் பிரசாரம், பா.ஜனதாவின் வெற்றிக்கு தடையாக வந்துவிடுமோ என்று அவர்கள் அஞ்சினர். இதனால் பா.ஜனதா கட்சி, தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தியது. அனைத்து மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாநில அளவிலான நிர்வாகிகளை இடைத்தேர்தல் களத்தில் இறக்கியது.

எடியூரப்பா அரசின் வாழ்வா, சாவா பிரச்சினை என்பதால் தலைவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து தேர்தல் பணியாற்றினர். மேலும் மராட்டிய மாநிலம் கைநழுவி சென்றுவிட்டதால், கர்நாடகத்தை எக்காரணம் கொண்டும் இழக்கக் கூடாது என்று பா.ஜனதா மேலிடம் அறிவுறுத்தியது. இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா அனைத்து தொகுதிகளிலும் 2 சுற்று பிரசாரத்தை மேற்கொண்டார்.

எடியூரப்பா பேசும்போது, இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளை வளர்ச்சியில் முன்மாதிரி தொகுதிகளாக மாற்றுவதாகவும், தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற வைத்தால் அனைவரையும் மந்திரி ஆக்குவதாகவும் பேசினார். மேலும் சாதி ரீதியாகவும் அவர் சில அம்சங்களை எடுத்து கூறினார். அந்த தொகுதிகளில் இருக்கும் பிரச்சினைகளை எடுத்து கூறி, அவற்றை தீர்த்து வைப்பதாகவும் உறுதியளித்தார்.

கர்நாடகத்தில் நிலையான ஆட்சி தொடர வேண்டும் என மக்கள் விரும்புவதாகவும், கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை மாநில மக்கள் விரும்பவில்லை என்றும் எடியூரப்பா பிரசாரம் செய்தார். எடியூரப்பாவின் இந்த பிரசாரம் காங்கிரசின் வெற்றியை தடுத்து நிறுத்தியதாக அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். மேலும் காங்கிரஸ் கட்சியில் சித்தராமையா மற்றும் மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ் மட்டுமே பிரதானமாக பிரசாரம் மேற்கொண்டனர்.

அக்கட்சியின் பிற தலைவர்கள் இடைத்தேர்தல் பிரசாரத்தில் அதிகமாக தென்படவில்லை. காங்கிரசில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், அக்கட்சியின் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக தேர்தல் பணியாற்றவில்லை என்றும், அது தான் காங்கிரசின் தோல்விக்கு காரணம் என்றும் அரசியல் விமர்சகர்கள் சொல்கிறார்கள். காங்கிரசில் தலைவர்களிடையே நீடித்து வரும் பனிப்போர், அக்கட்சியின் வளர்ச்சியை தடுப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

Next Story