தஞ்சை அருகே கார் மோதி லாரி டிரைவர் பலி பிணத்தை தோப்பில் வீசி சென்ற 2 பேர் கைது


தஞ்சை அருகே கார் மோதி லாரி டிரைவர் பலி பிணத்தை தோப்பில் வீசி சென்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2019 11:15 PM GMT (Updated: 10 Dec 2019 6:21 PM GMT)

தஞ்சை அருகே கார் மோதி லாரி டிரைவர் இறந்தார். அவரது பிணத்தை தோப்பில் வீசி சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கள்ளப்பெரம்பூர்,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள பொய்யுண்டார்கோட்டை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்(வயது51). லாரி டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவு ஒரத்தநாடு- வல்லம் சாலையில் உள்ள ஒரு தோப்புக்கு விறகுகள் ஏற்றுவதற்காக சென்றார். தொழிலாளர்கள் வெட்டிய விறகுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். தர்மராஜ் லாரி அருகே நின்று சக தொழிலாளர்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் தர்மராஜ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தர்மராஜ் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார். ஆனால் அவர் மீது மோதிய கார் நிற்காமல் சென்றது. உடனே லாரியில் விறகுகளை ஏற்றிக்கொண்டிருந்த தொழிலாளர்களில் சிலர் மோட்டார் சைக்கிளில் காரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

காரில் சாவு

பின்னர் அவர்கள், காரில் இருந்த 2 பேரையும் சம்பவ இடத்துக்கு காரை ஓட்டி வர செய்தனர். தொடர்ந்து அதே காரில் தர்மராஜை ஏற்றி தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுடன் காரில் சக தொழிலாளியான வாகரக்கோட்டையை சேர்ந்த சேகர் மகன் ராஜா(23) என்பவரும் சென்றார். அப்போது அங்கிருந்த தொழிலாளர்கள் கார் எண்ணை குறித்து வைத்துக்கொண்டு காரை தங்களது செல்போனில் படம் பிடித்து வைத்துக்கொண்டனர். தஞ்சை புதுக்கோட்டை சாலையில் உள்ள திருக்கானூர்பட்டி நான்கு ரோடு அருகே வந்த போது காரிலேயே தர்மராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அதனை தொடர்ந்து காரில் சென்றவர்கள், தஞ்சை விமானப்படை தளம் அருகே வந்த போது ராஜாவை மிரட்டி சாலையிலேயே இறக்கி விட்டு விட்டு, தர்மராஜ் உடலுடன் காரில் தப்பி சென்றனர்.

2 பேர் சிக்கினர்

இது குறித்து ராஜா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் கார் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய காரை தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே உள்ள மெக்கானிக் ஷெட்டில் போலீசார் கண்டு பிடித்தனர். காரின் எண்ணையும் அதில் இருந்த சில ஆவணங்களையும் வைத்து அதன் உரிமையாளரான தஞ்சை கீழவாசலை சேர்ந்த ராஜே‌‌ஷ் (35) காரில் இருந்த மற்றொருவரான வைத்தீஸ்வரன்(22) ஆகியோரை நேற்று அதிகாலை தஞ்சை கீழவாசலில் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

தோப்பில் உடலை வீசினர்

அதன் அடிப்படையில் பிள்ளையார்பட்டி- திருவையாறு புறவழிச்சாலையில் உள்ள ஒரு தோப்பில் கிடந்த லாரி டிரைவர் தர்மராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் காரின் உரிமையாளர் ராஜே‌‌ஷ் மற்றும் வைத்தீஸ்வரன் இருவரும் தஞ்சையில் தானிய வியாபாரம் செய்து வருவதாகவும், சம்பவம் நடந்த போது இருவரும் தானியங்களை ஒரத்தநாட்டில் உள்ள கடைகளுக்கு சப்ளை செய்து விட்டு வரும் போது விபத்து நடந்ததாக தெரிவித்தனர். மேலும் காரில் வந்த தொழிலாளி ராஜாவை மிரட்டி சாலையில் இறக்கி விட்டு, தர்மராஜ் உடலை தோப்பில் வீசி உள்ளனர். விபத்தில் சேதமடைந்த காரின் முன் பகுதியை சரி செய்வதற்காக காரை தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே உள்ள மெக்கானிக் ஷெட்டில் விட்டு விட்டு, வீட்டிற்கு சென்றது தெரிய வந்தது. மேலும் இது குறித்து வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜே‌‌ஷ், வைத்தீஸ்வரன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story