கலவையில் மின்சாரம் பாய்ந்து தி.மு.க.பிரமுகர் பலி - போலீஸ் நிலையம் அருகே பரபரப்பு


கலவையில் மின்சாரம் பாய்ந்து தி.மு.க.பிரமுகர் பலி - போலீஸ் நிலையம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:45 PM GMT (Updated: 11 Dec 2019 3:26 PM GMT)

கலவையில் மின்சாரம் பாய்ந்து தி.மு.க.பிரமுகர் பலியானார். போலீஸ் நிலையம் அருகே நடந்த இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டம், கலவையில் உள்ள நைனார் தெருவை சேர்ந்தவர் சந்துரு (வயது 56). தி.மு.க.பிரமுகர் இவர் கலவையில், திமிரி சாலை சந்திப்பில் வடை, பஜ்ஜி, போன்டா ஆகியவை தயாரித்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது கடையில் இருந்த சந்துரு, சிறுநீர் கழிப்பதற்காக எதிரே போலீஸ் நிலைய காம்பவுண்ட் சுவர் அருகே சென்றுள்ளார். அங்கிருந்த ஊர்களின் பெயர்கள் அடங்கிய, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள வழிகாட்டி பலகையை தொட்டுவிட்டதாக தெரிகிறது.

அப்போது அதிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் சந்துரு தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து கலவை போலீசார் சந்துரு பிணத்தை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தி வருகின்றனர்.

ஊர்களின் பெயர்களை காட்டும் வழிகாட்டி பலகையில் மின்சாரம் கசிந்ததற்கு கண்காணிப்பு கேமராக்களிலிருந்து மின்சாரம் பாய்ந்ததா அல்லது அருகிலுள்ள ஹைமாஸ் உயர்கோபுர மின் விளக்கிற்கு செல்லும் மின்சார வயரிலிருந்து மின்சாரம் பாய்ந்ததா என்பது தெரியவில்லை. இது குறித்து கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான சந்துருவிற்கு, குட்டி என்ற மனைவியும், 2 மகள்களும்,ஒரு மகனும் உள்ளனர். போலீஸ் நிலையம் அருகிலேயே மின்சாரம் தாக்கி தி.மு.க.பிரமுகர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story