மாவட்டத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதி 194 கிராம ஊராட்சிமன்றங்களின் தலைவர் பதவிகளுக்கு தேர்தல்


மாவட்டத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதி 194 கிராம ஊராட்சிமன்றங்களின் தலைவர் பதவிகளுக்கு தேர்தல்
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 6:00 PM GMT)

சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதி 194 கிராம ஊராட்சிமன்றங்களின் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

சேலம், 

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் 29 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கும், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கும், 385 கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

இதில் முதற்கட்டமாக வருகிற 27-ந் தேதி எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி, ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 194 கிராம ஊராட்சிமன்றங்களின் தலைவர் பதவிகள், 1,914 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள், 169 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 17 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் என 2,294 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம், கெங்கவல்லி, பனமரத்துப்பட்டி, பெத்தநாயக்கன்பாளையம், சேலம், தலைவாசல், வாழப்பாடி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 191 கிராம ஊராட்சிமன்றங்களின் தலைவர் பதவிகள், 1,683 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகள், 119 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், 12 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் என 2,005 பதவிகளுக்கு 2-ம் கட்டமாக வருகிற 30-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. முதல் நாளில் 309 பேரும், நேற்று முன்தினம் 138 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர் தலுக்கு 20 இடங்களில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது.

வாக்குப்பதிவு மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் விரைவில் நடைபெற உள்ளது என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதவிர வேட்புமனு தாக்கலையொட்டி ஒவ்வொரு அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story