மத்திய ரெயில்வே வழித்தடத்தில் அடுத்த மாதம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை அதிகாரி தகவல்


மத்திய ரெயில்வே  வழித்தடத்தில்   அடுத்த  மாதம் ஏ.சி.  மின்சார ரெயில்  சேவை அதிகாரி  தகவல்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 8:42 PM GMT)

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் அடுத்த மாதம் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கும் என அதிகாரி கூறினார்.

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இயக்குவதற்காக சென்னை ஐ.சி.எப்.யில் தயாரான ஏ.சி. மின்சார ரெயில் கடந்த சில நாட்களுக்கு முன் மும்பை வந்தது. தற்போது அந்த ரெயில் குர்லாவில் உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் ஏ.சி. மின்சார ரெயிலின் சோதனை ஓட்டம் தொடங்கப்பட உள்ளது.

இந்தநிலையில், ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படுவது குறித்து மத்திய ரெயில்வே கோட்ட மேலாளர் சலாப் கோயல் கூறியதாவது:-

பெண் மோட்டார் மேன்கள்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட உள்ள ஏ.சி. மின்சார ரெயிலை மும்தாஸ் காஷி, மனிஷா மாகே என்ற 2 பெண் மோட்டார் மேன்கள் இயக்க உள்ளனர். அவர்களுடன் ஏ.சி. மின்சார ரெயிலை இயக்குவது குறித்து 100 ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

சோதனை ஓட்டம் முடித்த பிறகு அடுத்த மாதம்(ஜனவரி) ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க உள்ளோம். ஏ.சி. மின்சார ரெயிலில் பெண்கள் பெட்டியிலும், மோட்டார் மேன் கேபின் வெளியிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில்..

இதுகுறித்து மற்றொரு ரெயில்வே அதிகாரி கூறுகையில், ‘‘மத்திய ரெயில்வே வழித்தடத்தில் பன்வெல் - தானே இடையே டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்படலாம். எனினும் இதுகுறித்து பயணிகள் அமைப்பினருடன் கருத்து கேட்ட பின்புதான் முடிவு எடுக்கப்படும்’’ என்றார்.

Next Story