குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2019 9:19 PM GMT (Updated: 11 Dec 2019 9:19 PM GMT)

சென்னையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பூர்,

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத் மற்றும் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மசோதா நாட்டை பிளவுப்படுத்தும் என்றும், இந்திய நாட்டின் அடையாளத்தை அழிக்க ஆர்.எஸ்.எஸ். முயற்சி செய்கிறது என்றும் கூறி கோஷங்கள் எழுப்பினர்.

பின்னர் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு நிருபர்களிடம் கூறியதாவது:- ‘குடியுரிமை சட்டம் ஜனநாயக விரோதமானது என்றும், ராஜீவ் காந்தி கடும் முயற்சி மேற்கொண்டு வடகிழக்கு மாநிலங்களில் அமைதியை தேடித்தந்தார்.

இந்தியாவில் இந்த மசோதாவை நிறைவேற்றினால் மத, இன, மொழி வேறுபாடுகள் ஏற்பட்டு சிறுபான்மை மக்களுக்கு எதிரானதாக அமையும்’.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story