கூடுவாஞ்சேரி அருகே பெயிண்டர் மர்மச்சாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்


கூடுவாஞ்சேரி அருகே பெயிண்டர் மர்மச்சாவு - சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 7:31 PM GMT)

கூடுவாஞ்சேரி அருகே பெயிண்டர் மர்மமான முறையில் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் புகார் செய்தனர்.

வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த தைலாவரம் வீரபத்திர நகர் தெருவில் உள்ள அரசு மதுக்கடை அருகே உள்ள மழைநீர் கால்வாயில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஓருவர் ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கூடுவாஞ்சேரி போலீசார் இறந்து கிடந்த அந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் இறந்த நபர் பூந்தமல்லி குயின் விக்டோரியா தெருவை சேர்ந்த ஜெகன் (வயது 24) என்பதும் பெயிண்டர் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் பெயிண்டர் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம் வீரபத்திர நகரில் அரசு மதுக்கடை அருகில் உள்ள கால்வாயில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது மகன் ஜெகனின் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயங்கள் இருப்பதால் சாவில் மர்மம் இருக்கிறது என்று அவரது பெற்றோர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டர் வேலைக்கு சென்றவர் எதற்காக கூடுவாஞ்சேரிக்கு சென்றார். மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் யாராவது அடித்துக்கொலை செய்து உடலை கால்வாயில் வீசி விட்டு சென்றார்களா? அல்லது முன்விரோதம் காரணமாக ஜெகன் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story