தூத்துக்குடி அருகே, அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் - எரிவாயு குழாய் பதிக்கும் ஆய்வுக்கு எதிர்ப்பு


தூத்துக்குடி அருகே, அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் - எரிவாயு குழாய் பதிக்கும் ஆய்வுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 7:34 PM GMT)

தூத்துக்குடி அருகே எரிவாயு குழாய் பதிக்கும் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

ஸ்பிக்நகர், 

தூத்துக்குடி அருகே உள் பொட்டல்காடு, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் எரிவாயு குழாய்கள் பதிக்க முடிவு செய்து அதற்கான பணிகள் நடந்து வந்தன. ஆனால் அந்த பகுதி மக்கள் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் தூத்துக்குடி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், மண்டல துணை தாசில்தார் செல்வகுமார், முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் மற்றும் போலீசார், எரிவாயு குழாய்கள் பதிக்க இருக்கும் இடங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அது சம்பந்தமான வரைபடத்தை அங்கு உள்ள பொதுமக்களிடம் காட்டி விளக்கம் அளித்தனர். அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தியதால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அரசுக்கு நாங்கள் ஆய்வு நடத்தியதையும், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையும் தெரியப்படுத்துவோம் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story