4 பேர் போட்டியிட விரும்பியதால், பஞ்சாயத்து தலைவர் பதவி வேட்பாளரை தேர்வு செய்ய கிராம மக்கள் நடத்திய தேர்தல்


4 பேர் போட்டியிட விரும்பியதால், பஞ்சாயத்து தலைவர் பதவி வேட்பாளரை தேர்வு செய்ய கிராம மக்கள் நடத்திய தேர்தல்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:45 PM GMT (Updated: 12 Dec 2019 7:57 PM GMT)

4 பேர் போட்டியிட விரும்பியதால் ராமநாதபுரம் அருகே சுமைதாங்கி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலுக்கு சின்னங்களுடன் கூடிய ஓட்டுச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஏல முறையில் பஞ்சாயத்து தலைவரை தேர்ந்தெடுப்பதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்தநிலையில் ராமநாதபுரம் அருகே ஒரு கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் வேட்பாளர் தேர்வு செய்வதற்காக மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு தேர்தலை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் களரி ஊராட்சிக்கு உட்பட்ட சுமைதாங்கி கிராமத்தில்தான் இந்த தேர்தல் நடந்துள்ளது. இந்த ஊராட்சியில் சுமைதாங்கி, ஆணைகுடி, மேலசீத்தை ஆகிய கிராமங்கள் உள்ளன. ஆதிதிராவிடர் வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த ஊராட்சி் தலைவர் பதவிக்கு, சுமைதாங்கி பகுதி மக்கள் இந்த முறையாவது தங்கள் பகுதியை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.

இந்த முடிவின்படி வேட்பாளர் நிறுத்த முயன்றபோது, சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த 4 பேர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தங்களை தேர்வு செய்யுமாறு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஒரு கிராமத்தில் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் போட்டியிடும்பட்சத்தி்ல் வாக்குகள் சிதறும். எனவே அதனை பயன்படுத்தி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் எளிதில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்று கருதிய சுமைதாங்கி கிராம மக்கள், அந்த 4 பேரில் மக்கள் ஆதரவு பெற்ற வேட்பாளர் யார்? என்பதை இன்னொரு தேர்தல் நடத்தி முடிவு செய்யலாம் என்று தீர்மானித்தனர்.

இதற்காக சுமைதாங்கி கிராமத்தில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராக இருந்த ராமையா, ராஜா, வீரகுமார், சேதுவீரபாண்டி ஆகியோரை தேர்தலில் நிற்பதுபோல் வாக்குச்சீட்டுகள் அச்சடித்து அதில் 4 பேருக்கும் தனித்தனி சின்னங்கள் ஒதுக்கி நேற்று காலை தேர்தல் நடத்தினர்.

முன்னதாகவே இந்த தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்டிருந்ததால் அனைவரும் எங்கும் செல்லாமல் கிராமத்தில் தங்கியிருந்தனர். சுமைதாங்கி கிராமத்தில் உள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற இந்த தேர்தலில் 453 பேருக்கு வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன. வரிசையில் நின்று அவர்கள் வாக்குகளை பதிவு செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த சில்வர் பானையில் போட்டனர். அந்த கிராமத்தை சேர்ந்த பிரமுகர் ஒருவர் தேர்தல் அலுவலராக இருந்து இந்த தேர்தலை நடத்தினார்.

இதற்கிடையே இந்த தேர்தல் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை தாசில்தார் வீரராஜ், திருப்புல்லாணி யூனியன் ஆணையாளர் ரமேஷ்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் உள்ளிட்டோர் அங்கு விரைந்து சென்றனர். வேட்பாளரை தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்த சில்வர் பானையையும், வாக்குச்சீட்டுகளையும், முத்திரை உள்ளிட்டவைகளையும் கைப்பற்றினர்.

அதிகாரிகள் வருகைக்கு முன்பாகவே மொத்தம் உள்ள 453 பேரில் 134 பேர் ஓட்டுப்போட்டு இருந்தனர். உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக இதுபோன்று தேர்தல் நடத்தியது குறித்து கிராமத்தினரை அதிகாரிகள் கண்டித்தனர். மேலும் போலீசார் சிலரை அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட வாக்குச்சீட்டுகள் திருஉத்தரகோசமங்கை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப் பட்டன.

பரபரப்பாக பேசப்பட்ட இந்த தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சுமைதாங்கி கிராமத்தில் இதுபோன்று தேர்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து வருவாய்த்துறையினர், போலீசார் அங்கு விரைந்து சென்று தேர்தலை தடுத்து நிறுத்தி பொருட்களை கைப்பற்றி உள்ளனர். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஊராட்சி தலைவர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் நடத்தியது தவறு. எனவே, இதில் தொடர்புடையவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் மக்கள் ஜனநாயக முறையில் அறிவிக்கப்பட்டுள்ள தேதி அன்று தங்களின் விருப்பப்படி முறையாக வாக்களிக்க வேண்டும். தாங்களாகவே முடிவு செய்து பதவிகளை ஏலம் முறையிலோ அல்லது தேர்தல் முறையிலோ இதுபோன்று தேர்வு செய்வது சட்டப்படி குற்றமாகும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story