மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற முயற்சி செய்யவில்லை - முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி


மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற முயற்சி செய்யவில்லை - முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 8:04 PM GMT)

மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற நான் முயற்சி மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபையில் காலியாக இருந்த 15 இடங்களுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. கட்சியின் பின்னடைவுக்கு பொறுப்பேற்று தினேஷ் குண்டுராவ் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

அந்த பதவியை கைப்பற்ற மாநில காங்கிரசில் பிற தலைவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதில் முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாரின் பெயரும் அடிபடுகிறது. இதுகுறித்து அவர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியில் நான் கோஷ்டியை உருவாக்கி அரசியல் செய்வது இல்லை. சாதி, மதத்தின் அடிப்படையில் அணி சேர்க்கவில்லை. அவ்வாறு செய்வதாக இருந்திருந்தால், எஸ்.எம்.கிருஷ்ணா ஆட்சி காலம் முடிவடைந்த பிறகு நான் அணியை திரட்டி செயல்பட்டிருக்க முடியும். மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை பெற எந்த முயற்சியும் செய்யவில்லை. அதற்கான அவசியமும் எனக்கு இல்லை.

கட்சி தொண்டர்கள் நம்பிக்கை இழக்கக்கூடாது. சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர், மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகள் காலியாக இல்லை. தினேஷ் குண்டுராவ், சித்தராமையா ராஜினாமா கடிதங்களை மேலிடம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. இடைத்தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியில் அவர்கள் ராஜினாமா மூலம் தங்களின் வேதனையை பதிவு செய்துள்ளனர்.

தேர்தலில் வெற்றி-தோல்வி ஏற்படுவது சகஜம். நானும் அதிகளவில் இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளேன். மக்கள் கூட்டம் கூடுவதால், ஓட்டுகள் வருவது இல்லை. ஓட்டு அரசியல், தேர்தல் அரசியல் இரண்டும் வேறு. டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெறும் ‘பாரத் பச்சாவ்‘ போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி செல்கிறேன். இவ்வாறு டி.கே.சிவக் குமார் கூறினார்.

Next Story