போலீசார் என்று கூறி கேரள வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறித்த மர்மநபர்களுக்கு வலைவீச்சு


போலீசார் என்று கூறி கேரள வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பறித்த மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 11:06 PM GMT (Updated: 12 Dec 2019 11:06 PM GMT)

சென்னை பாரிமுனையில் போலீஸ் எனக்கூறி கேரள வியாபாரியிடம் ரூ.1½ லட்சம் பணம் பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர்,

கேரள மாநிலம் ஆலப்புழா வெள்ளிவயலார் பகுதியை சேர்ந்த நிஷாந்த் (வயது 38). இவர் கேரளவில் கடை நடத்தி வருகிறார். இவர் கடைக்கு தேவையான பொருட்களை சென்னைக்கு வந்து வாங்கி செல்வது வழக்கம். கடந்த செவ்வாய்க்கிழமை சென்னை பாரிமுனைக்கு வந்த நிஷாந்த் நாராயண முதலி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் நிஷாந்தை வழிமறித்து, குற்றப்பிரிவு போலீசார் என்று கூறி அவரது பையை சோதனை செய்து விட்டு சென்றுள்ளனர்.

அதன்பின்னர், அவர்கள் 2 பேரும் சென்ற பின்னர், நிஷாந்த் பையை சரி பார்த்தபோது, அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிஷாந்த், இது குறித்து பூக்கடை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், பூக்கடை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரள வியாபாரியிடம் போலீஸ் என்று கூறி நாடகமாடி பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Next Story