மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு


மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலியபடுக்கை பூஜை - திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 8:05 PM GMT)

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்றாகும். கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப் படுகிறது.

இங்கு மாசிக்கொடை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும். அப்போது நடக்கும் மகாபூஜை எனப்படும் வலிய படுக்கை பூஜை முக்கிய வழிபாடாக கருதப்படுகிறது. இந்த பூஜை மாசி திருவிழாவின் 6-ம் நாளிலும், பங்குனி மீன பரணிக் கொடையன்றும் மற்றும் கார்த்திகை மாத கடைசி வெள்ளிக்கிழமையிலும் என ஆண்டுக்கு 3 முறை நடக்கும்.

அதன்படி கார்த்திகை மாத கடைசி வெள்ளியான நேற்று 3-வது வலியபடுக்கை பூஜை நடந்தது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், பஞ்சாபிஷேகம், உ‌‌ஷ பூஜை நடைபெற்றது. மதியம் 1 மணிக்கு உச்ச கால பூஜைக்கு பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலையில் கோவில் சுத்தம் செய்யப்பட்டு மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, வில்லிசை, வாணவேடிக்கை, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணிக்குள் வலியபடுக்கை என்ற மகா பூஜையும் நடந்தது. வலிய படுக்கை பூஜையின்போது கனி வகைகள் மற்றும் அம்மனுக்கு மிகவும் பிடித்த உணவு பதார்த்தங்கள் அம்மன் முன் பெருமளவில் படைக்கப்பட்டு, தீப விளக்குகள் ஏற்றப்பட்டும் சிறப்பு தீபாராதனை நடைப்பெற்றது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மற்றும் கேரளாவில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Next Story