கிரிக்கெட் போட்டியில் புகையிலை விளம்பரத்தை தடை செய்யக்கோரி சேப்பாக்கம் மைதானம் அருகே பா.ம.க. ஆர்ப்பாட்டம்


கிரிக்கெட் போட்டியில் புகையிலை விளம்பரத்தை தடை செய்யக்கோரி   சேப்பாக்கம் மைதானம் அருகே பா.ம.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2019 11:00 PM GMT (Updated: 13 Dec 2019 8:30 PM GMT)

கிரிக்கெட் போட்டியில் புகையிலை விளம்பரத்தை தடை செய்யக்கோரி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

கிரிக்கெட் போட்டிகளில் ‘குட்கா’ உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விளம்பரங்களை தடைசெய்ய வலியுறுத்தி இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு பசுமை தாயகத்தின் தலைவரும், பா.ம.க. இளைஞர் அணி தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க.வின் பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன், தென் சென்னை மாவட்ட தலைவர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிரிக்கெட் போட்டிகளில் புகையிலை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும் எனக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது ஏ.கே.மூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

கிரிக்கெட் வீரர்களின் உடைகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் புகையிலை குறித்த விளம்பரங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. இதை தடைசெய்ய வேண்டும். சேப்பாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஒருநாள் போட்டியில் புகையிலை குறித்த விளம்பரங்கள் இடம்பெற்றால் மைதானத்துக்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story