இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையா காரணமா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்


இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையா காரணமா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:15 PM GMT (Updated: 13 Dec 2019 9:03 PM GMT)

இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு சித்தராமையா காரணமா? என்பதற்கு முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

பெங்களூரு,

15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவியை சித்தராமையாவும், மாநில தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவும் ராஜினாமா செய்துள்ளனர். இதையடுத்து, மாநில தலைவர் பதவியை கைப்பற்ற முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கட்சி மேலிடத்தின் அழைப்பை ஏற்று அவர் டெல்லியில் முகாமிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தனக்கு வழங்கும்படி டி.கே.சிவக்குமார் கேட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், டெல்லியில் நேற்று டி.கே.சிவக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை தினேஷ் குண்டுராவ் ராஜினாமா செய்திருந்தாலும், அவரது ராஜினாமாவை கட்சி மேலிடம் அங்கீகரிக்கவில்லை. இதனால் மாநில தலைவர் பதவி தற்போது காலியாக இல்லை. அப்படி இருக்கும் போது மாநில தலைவர் பதவியை கைப்பற்ற நான் ஏன் முயற்சிக்க வேண்டும். மாநில தலைவர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை. இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் வெற்றி பெற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் உழைத்தனர். ஆனால் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்கவில்லை.

இடைத்தேர்தல் தோல்விக்கு சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் காரணம் இல்லை. அவர்கள் தான் தோல்விக்கு முழு காரணம் என்று கூறுவது சரியல்ல. இடைத்தேர்தலில் வெற்றி பெற சித்தராமையாவும், தினேஷ் குண்டுராவும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர். தேர்தலில் வெற்றி, தோல்வி ஏற்படுவது சகஜம். தோல்வியில் இருந்து மீண்டு வர வேண்டும். இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story