கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை: அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை - ‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை’


கர்நாடகத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை: அதிகாரிகளுக்கு எடியூரப்பா எச்சரிக்கை - ‘மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை’
x
தினத்தந்தி 13 Dec 2019 11:30 PM GMT (Updated: 13 Dec 2019 9:26 PM GMT)

இடைத்தேர்தல் வெற்றி மூலம் நிலையான அரசு அமைந்து இருப்பதால் முதல்-மந்திரி எடியூரப்பா மாநில வளர்ச்சியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், மக்கள் பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 12 தொகுதிகளில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது.

இதன் மூலம் சட்டசபையில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மை பலத்துடன் உள்ளது. இதன் மூலம் ஆட்சியை தக்க வைத்து கொண்டுள்ளது. பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளில் அரசு கவனம் செலுத்தவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்த நிலையில், இடைத்தேர்தல் வெற்றியால் எடியூரப்பா தலைமையிலான அரசு பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. இதனால் முதல்-மந்திரி எடியூரப்பா உத்வேகத்துடன் மாநில வளர்ச்சிப் பணியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

ஏற்கனவே அவர், இடைத்தேர்தல் மூலம் நிலையான ஆட்சிக்கு மக்கள் வழிவகுத்துள்ளனர் என்றும், எனவே இனி மாநிலத்தில் வளர்ச்சி பணிகளில் முழுமையாக கவனம் செலுத்துவேன் என்றும் கூறி இருந்தார். இந்த நிலையில், பெங்களூரு விதானசவுதாவில் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறைகளையும் சேர்ந்த அரசு உயர் அதிகாரிகளுடன் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

இதில், துணை முதல்-மந்திரிகள் கோவிந்த் கார்ஜோள், அஸ்வத் நாராயண், மந்திரிகள் ஈசுவரப்பா, அசோக், பசவராஜ் பொம்மை, பிரபு சவுகான், சசிகலா ஜோலே, கர்நாடக அரசின் தலைமை செயலாளர் விஜய பாஸ்கர், பல்வேறு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமை செயலாளர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், “மாநிலத்தில் 110 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை, வெள்ளத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 8 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்த விவசாய பயிர்கள் நாசமடைந்து உள்ளன. 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை அரசு அறிவித்துள்ளது. அப்படி இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவில்லை என ஏராளமான புகார்கள் வருகின்றன. அதிகாரிகள் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?.

வீடுகளை இழந்தவர்கள் புதிதாக வீடு கட்டி கொள்ள ரூ.5 லட்சமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள நிதியில் இருந்து கூடுதலாக ரூ.10 ஆயிரம் வழங்கும்படியும் உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சென்றடையவில்லை. இதற்கான காரணம் என்ன?, எதற்காக நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்காமல் காலதாமதம் ஆகிறது,“ என்றார்.

அப்போது சில அதிகாரிகள் குறுக்கிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காமல் இருப்பதற்கான காரணத்தை எடுத்து கூற முயன்றார்கள். உடனே முதல்-மந்திரி எடியூரப்பா, “நீங்கள்(அதிகாரிகள்) எந்த விதமான காரணமும் சொல்ல வேண்டாம், உங்களிடம் காரணத்தை கேட்க விரும்பவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் கிடைக்காமல் இருப்பதை இனியும் சகித்து கொண்டு இருக்க மாட்டேன்.

நீங்கள் என்ன செய்வீர்கள் என்று எனக்கு தெரியாது. இன்னும் ஒரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படாமல் இருக்கும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மழை, வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு 4 மாதங்கள் ஆகியும் வீடுகளை இழந்த 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்ட முன்வராமல் உள்ளனர். அவர்களுக்கான நிவாரண நிதியை காசோலை மூலம் வழங்குங்கள்“ என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து முதல்-மந்திரி எடியூரப்பா பேசுகையில், “அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை மக்களிடையே கொண்டு செல்வது ஒவ்வொரு அதிகாரிகளின் பொறுப்பாகும். வளர்ச்சி பணிகளில் அதிகாரிகள் முழு கவனம் செலுத்த வேண்டும். மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்து, அதனை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும். மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வராத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். ஒவ்வொரு துறைகளை சேர்ந்த கூடுதல் தலைமை செயலாளர்களும், தங்களது துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். கீழ் மட்டத்தில் பணியாற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டும்.

சம்பந்தப்பட்ட துறைகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை 15 நாட்களுக்கு ஒரு முறை மாவட்டங்களுக்கு சென்று செயலாளர்கள் பார்வையிட வேண்டும். கூடுதல் தலைமை செயலாளர்கள் மாதம் ஒரு முறை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று வளர்ச்சி பணிகளை பார்வையிட வேண்டும். எந்த வளர்ச்சி பணிகளும் காலதாமதம் ஆகாமல் பார்த்து கொள்ள வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பாகும். அவ்வாறு மாவட்டங்களுக்கு சென்று பார்வையிடுவதுடன், அதுதொடர்பான அறிக்கையை அரசிடம் அளிக்க வேண்டும்,” என்றார்.

Next Story